Friday, October 2, 2009

கல்லூரிச் சாலை ராகிங் நொ 3

இந்த பதிவைப் படிக்கும் முன் பெரிய மனுசன் ராகிங் 2 பதிவை படித்தால் தொடர்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

என் நண்பர்கள் கூறியது போல நான் ஒரு பெண்ணை ராகிங் செய்ய முடிவு எடுத்தேன். ஆனால் என்ன பிரச்சனை என்றால் அங்கு பெரும்பாலும் அந்த பள்ளியில் படித்த பெண்கள்தான். நான் டீச்சர் தம்பி என்பது அனைவருக்கும் தெரியும். ஆதலால் நான் எதாது செய்யப் போய் அது எங்க அக்காவின் பேரைக் கெடுப்பது போல் ஆகிவிடக்கூடாது. எனக்கு இதுதான் பிரச்சனை அந்த ஊரில் எல்லாரும் ஒரு விதத்தில் எங்க அக்காவிற்கும் என் அண்ணாவிற்கும் தெரிந்தவர்கள். நான் எதாது தப்பு செய்தால் என் பெயருடன் இவர்கள் பெயரும் கெடும், நான் நாம் நல்ல பெயர் எடுக்கவில்லை என்றாலும் அவர்கள் எடுத்த பெயரைக் கெடுக்ககூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன், இந்த ஓரு காரணத்தினால் தான் என் நண்பர்கள் அனைவரும் புகை, பீர் அடித்த போதும் நான் கல்லூரி இறுதியாண்டு வரை எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவனாக இருந்தேன். நிலமை இப்படியிருக்க நான் ராகிங் பண்ணி அவர்கள் மிஸ் உங்க தம்பி இதை சொன்னார்னு சொல்லிட்டா நான் அவர்கள் முகத்தில் முழிப்பது சிரமம். இரண்டாவது பிரச்சனை இது பெண்களை ராகிங் செய்வது அவர்கள் முகம் வாடினாலே அல்லது அழுதுவிட்டாலே எனக்கு சாப்பாடு இறங்காது. ஆதலால் இந்த இரண்டு பிரச்சனைகளையும் நான் அமாராவதி ஆத்துமேட்டில் தனியாக உக்காந்து யோசித்து, சரி யாரது ஒரு தெரியாத வெளி ஊரு பெண்ணை, அவள் மனம் நேகாதவாறு ராகிங் செய்வது( நீ அழகா இருக்க, இந்த டிரஸ் நல்லா இருக்கு, உன் வாய்ஸ் நல்லா இருக்கு பாடத்தெரியுமா) என்று கிண்டல் செய்யலாம் என்று முடிவு செய்தேன். இது புகழ்ச்சியாவும் இருக்கும், நண்பர்களுக்கு கிண்டல் பண்ண மாதிரியும் இருக்கும். ஆனால் யாரைக் கிண்டல் செய்வது என்று தெரியவில்லை.

அப்போதுதான் அவளைப் பார்த்தேன், அவள் பெயர் அனிதா, குஜராத்தி பெண், நல்ல கலரா இருப்பா, முகம் ரொம்ப அட்ராக்டிவ் என்று சொல்ல முடியாவிட்டால் கூட அழகாய் இருப்பாள். அவள் எங்க கல்லூரி வந்து பத்து நாள்தான் ஆகின்றது. நான் ஏற்கனவே ஒரு பெண்ணை லவ் லவ்வுனு லவ்வுதால் எனக்கு அவள் மீது காதல் இல்லை என்றாலும் ஒரு ஈர்ப்பு இருக்கும். அவள் கலருக்கு ஏற்ற சுடிதாரில் கையில் மார்பில் அனைத்த புத்தகதுடன் குனிந்த தலையுடன் போவாள். அவள் வகுப்பில் கூட அமைதியாய் இருப்பாள் நல்ல பெண் என்று தகவல் சேகரித்தேன். நான் கல்லூரிக்குள் வந்த பத்து நாளும் அவள் வந்தால் அவள் தலை மறையும் வரை பார்த்துக்கொண்டு(ஜொள்ளு) இருப்பேன். அந்த பத்து நாளில் அவள் என்னை நிமிர்ந்து பார்த்தது இரண்டு அல்லது மூன்று முறைதான். எனவே அனிதாவைக் கிண்டல் செய்வது என முடிவு செய்தேன். பின் அவள் இந்திக்கார பெண் என்பதால் இந்தியில் அவளை கிண்டல் செய்யலாம், என் நண்பர்களுக்கும் இந்தி தெரியாததால் வசதியாக இருக்கும் என பிளான் பண்ணி, எனக்கும் இந்தி தெரியாததால் என் உறவினன்,நண்பன் கோவிந்தராஜ் என்ற குட்டியிடம் போய் நீ ரொம்ப அழகாய் இருக்க, எனக்கு பிடிச்சு இருக்கு என்பதற்கு இந்தியில் என்ன சொல்வது என்று ராகிங் விசயத்தை சொல்லாமல் கேட்டேன். அவன் நான் ல்வ்வும் பெண்ணிடம்தான் சொல்லப் போகின்றேன் என்று நினைத்து என்னிடம் சொல்லிக்கொடுத்தான். நான் அதை ஆஞ்சநேயர் சுலேகம் மாதிரி உருப்போட்டு மனப்பாடன் செய்து,பின் மறுனாள் காலை என் நண்பர்களுடன் நின்று இருந்த போது வந்த அனிதாவிடம் நான் ஒன் மினிட் அனிதா என்று கூப்பிட்டு இந்தி சுலேகத்தை சொன்னேன்.
அவள் ஸாக் ஆகி ஒரு நிமிடம் என்னை முறைத்துப் பார்த்து போய்விட்டாள். அவள் முகம் குங்குமம் மாதிரி சிவந்து போய்விட்டது. அவள் மூக்கு நன்றாக சிவந்துவிட்டது. நானும் நண்பர்கள் என்ன சொன்னாய் என்று கேட்டதற்கு நான் கிண்டல் பண்ணினேன் என்று மட்டும் சொல்லிவிட்டு வகுப்புக்கு போய்விட்டேன். மனசுக்குள் பயம் அடித்துக்கொண்டாலும் காட்டிக்கொள்ளவில்லை.

அன்று மதியம் முதல் பீரியட் போது எங்கள் கல்லூரியின் உதவியாளர் ஒருவர் வந்து என்னை கல்லூரி மேலாளர் அவர் அறைக்கு அழைப்பதாக கூறினார். அப்போது பாடம் நடத்திக் கொண்டு இருந்த ஸ்டான்லி ஸேவியர் இளங்கோ என்ற என் அண்ணனைப் போல் பழகும் அவர் முகம் மாறி என்ன ஆச்சு யாரையாது கிண்டல் செய்தயா என்று கேட்டார் நான் இல்லை என்று கூறிவிட்டு உதவியாளரைப் பின் தொடந்தேன். பயம் வயிற்றைப் பிசைந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போனேன். அங்கு அனிதா அவர் முன் நின்று இருந்தாள். அவள் முகமும் ஒன்றும் புரியாமல் நின்றது எனக்கு புரிந்தது. மேலாளர் போன் பேசிக்கொண்டு இருந்ததால் எனக்கோ பிளான் பண்ண சர்ந்தப்பம் கிடைத்தது, நான் அவளை என்ன என்று ஜாடையில் கேக்க அவள் தெரியவில்லை என்று கையசைத்தாள். எனக்கு பயம் என்ன என்றால் இந்த மேலாளர் மனேகர் என் அக்காவுடன் வேலை பார்க்கும் ஒரு டீச்சரின் கனவர், அவர் இதைப் பத்தி டீச்சரிடம் சொன்னால் அக்காவிற்கு தெரிந்து என் மானம் போய்விடுமோ என்ற பயம். அந்த பள்ளி டீச்சர்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேனை வைத்துவிட்டு அனிதாவிடம் இவன் உன்னை ராகிங் செய்தானா என்று கேக்க அனிதா இல்லை என்பதுபோல் தலை அசைத்தாள். அவர் என்னிடம் நீ இவளை ராகிங் செய்தாயா என்று கேக்க நான் இல்லை என்று எனக்கு பிடிக்காத பொய்யை சொன்னேன். வேறு வழியில்லை என் சர்ந்தப்பம் அப்படி ஆகிவிட்டது. பின் அவர் இரண்டு பேரும் இல்லை என்று சொன்னிர்கள் ஆனால் இவர்(உதவியாளர்) நீ கிண்டல் செய்தாய் என கூறுகிறார் என்றார். என்ன உன்மையைச் சொல்லுங்கள் என்று அதட்டலாக கேட்டார். எனக்குப் புரிந்தது அனிதா புகார் செய்யவில்லை என்றும், ராகிங் தடுக்க போட்டியிருந்த உளவாளி அந்த உதவியாளர் தான் போட்டுக் கொடுத்துருக்கின்றான் என புரிந்துகொண்டேன். உடனே நான் சமயேசிதமாக கடகடவென அந்த பொய்யை சொன்னேன். அது என்னனா சார் அனிதா என் குடும்ப நண்பி, நான் அவளிடம் இந்தியில் பேசினேன், இந்தி புரியாத உதவியாளர் அதை கிண்டல் செய்வதாக நினைத்துவிட்டார் என்று ஒரே அடியாக கதைவிட்டேன். அவர் அனிதாவிடம் இது உன்மையா இவனை உனக்கு தெரியுமா என்று கேக்க அவள் அப்பாவியா முகத்தை வைத்துக்கொண்டு யெஸ் சார் என்றாள். மேலாளர் சுதாகர் உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் நீ நல்ல பையன் இருந்தாலும் கேக்க வேண்டியது என் கடமை என்றும், இது இருபாலர் கல்லூரி நீங்கள் நண்பர்கள் என்றாலும் கல்லூரிக்குள் இப்படி பேசுவது மற்றவர்கள் தவறாக நினைக்கூடும் ஆகவே இப்படி செய்யாதீர்கள் என்றார். நானும் சரிங்க சார் என்று நல்ல பிள்ளையாக கூறினேன். அவர் ஒகே நீங்க வகுப்புக்கு செல்லுங்கள் என கூறினார். நானும் அனிதாவும் வெளியில் வந்து கல்லூரியின் தண்ணிர் குடிக்கும் இடத்தில் நான் அனிதா ரொம்ப தாங்க்ஸ் என்றேன். என்னை காட்டி கொடுக்காமல் இருந்ததுக்கு தாங்க்ஸ் என்று சொன்னேன். என் நண்பர்கள் கட்டயத்தில்தான் உன்னை கிண்டல் பண்ணினேன் என்று சொல்லி முடித்தேன். என்னை நிமிந்து பார்த்த அவள் அது சரி அதுக்காக நீங்க அப்பிடியா சொல்லுவீங்க என்றாள்.

நான் அதிர்ச்சியாகி என்ன அனிதா நான் நீ ரொம்ப அழகா இருக்க, உன்னை எனக்கு பிடித்து இருக்கு என்றுதான சொன்னேன் என்றேன். அவள் என்னை கலவரம் ஆக பார்த்து அப்பிடியா சொன்னிங்க " நீ குரங்கு மாதிரி இருக்க உன்னை எனக்கு பிடிக்கலைதான் சொன்னிங்க என்றாள். எனக்கு என் நண்பன் பண்ணிய உட்டாலக்கடி வேலை புரிந்து, நான் சாரி அனிதா எனக்கு உன்மையில் இந்தி தெரியாது, என் நண்பனிடம் கேக்க அவன் இப்படி சொல்லிக் கொடுத்தான் என்று உன்மையச் சொன்னேன். அதுக்கு அவள் இந்தியில் " தும் ஸே பகுத் பாகல் ஹே, மே ஸே பகுத் குஸி ஹே என்று சிரித்துக்கொண்டு சொல்லிவிட்டு ஓடிப்போய்விட்டாள். நான் வகுப்புக்கு போய்விட்டு மாலையில் என் நண்பனை கொலை வெறியுடன் சந்திக்கச் சென்றேன். அவனிடம் இப்படி பண்ணிட்டையே என்று நடந்தை கூற அவன் நீ லவ்ஸ் பண்ற பெண்ணுகிட்ட தான் சொல்லுவ அதனால உன்ன காலாய்க்க சொன்னன். எததாது பிரச்சனைனா அவ கிட்ட சொல்லி சமாதனம் பண்ணலாமுன்னு இருந்தன் (என் லவ்ஸ் அவனுக்கு குடும்ப நண்பி) நீ எங் கிட்ட விளக்கமா சொல்லி கேக்கலாம் இல்ல என்றான். நான் அனிதா சொன்னதைக் கூறி விளக்கம் கேக்க அவனும் நீ ரொம்ப திருடன் எனக்கு ரொம்ப சந்தொசம் என்றான். நானும் அப்படியா என்று கூறினேன். அவன் எனக்கு சொல்லிக் கொடுத்த இந்தி என்ன தெரியுமா தும் ஸே பந்தர் ஹே. அச்சா நஹி என்று.

பின் குறிப்பு: அதற்கு அப்புறம் கல்லூரி முடியும் வரை அனிதா எனக்கு நல்ல நண்பி, எப்போது பார்த்தாலும் புன்னகைப்பாள். என் கல்லூரி முடிவுகள் வந்து நான் முதல் வகுப்பில் பட்டம் பெற்ற செய்தி கேட்டு என் டிபார்ட்மெண்ட் வாசலை விட்டு வந்த போது லைப்ரரி வாசலில் இருந்த அனிதா புன்னகைத்தாள். நான் அனிதா நான் முதல் வகுப்பில் பட்டம் பெற்றுவிட்டேன் என முதலில் கூறியது அனிதாவிடம் தான். அவளும் எனக்கு வாழ்த்துக் கூறி மேல என்னப் போறிங்க என்று கேக்க நான் முதுனிலைப் பட்டம் படிக்கப் போறேன் என்றேன். அவளும் ரொம்ப நல்லது வாழ்த்துக்கள் என்றாள். அதுதான் நான் அனிதாவை கடைசியாகப் பார்த்தது. ஆனாலும் அவளின் நினைவுகள் இன்னமும் இருக்கு. நன்றி.

3 comments:

  1. முழுதும் பொறுமையாக வாசித்தேன்.உங்களின் குறும்பு அன்பான ஒரு நட்பைத்தானே தேடித்தந்தது.நல்லதுதானே.அந்தந்த வயதுகளின் அந்தந்தச் சந்தோஷங்கள் கட்டுப்பாட்டோடு இருக்கிறதும் சந்தோஷம்தான்.

    ReplyDelete
  2. சுதாண்ணா.. நீங்க ரொம்ப நல்லவர் சுதாண்ணா... அவ்வ்வ்வ்வ்வ்....
    ஏன்னு கேக்கறீங்களா? ஒண்ணில்ல ரெண்டு காரணம் இருக்கு...

    //நான் கல்லூரி இறுதியாண்டு வரை எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவனாக இருந்தேன்.//

    // அவர்கள் முகம் வாடினாலே அல்லது அழுதுவிட்டாலே எனக்கு சாப்பாடு இறங்காது.//

    ReplyDelete
  3. நன்றி ஹேமா, நன்றி சுசி, தங்களின் பின்னூட்டங்கள் எனக்கு நிறைய தூண்டுதலைத் தருகின்றன.
    எழுதும் ஆர்வத்தையும் தூண்டிவிடுகின்றன. மிக்க நன்றி.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.