Thursday, October 1, 2009

ரொம்ப நல்லவனா இருக்கதிங்க பாஸ்-அது தப்பு

யாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காதிங்க அதுக்காக ரொம்ப கெட்டவரகவும் இருக்காதிங்க குறைந்த பட்ச சில்லறைத் தவறுகள், ஆசைகளுடன் வாழுங்கள். மிதமான தப்பு அல்லது மிதமான பொய்கள்(பொண்ட்டாடி கிட்ட சொல்லறது) சொல்லுங்க. ஏன்னா ரொம்ப நல்லவங்க யாரும் இந்த உலகத்தில் அதிக நாள் வாழ்வது இல்லை. என் நண்பர்களிலும், எனக்கு தெரிந்தவர்களிலும் ரொம்ப நல்லவர்கள் என்று நான் நினத்த நாலு பேர் குறைந்த வயதில் மரணமடைந்தனர். அதில் வெறுத்து நான் வைத்ததுதான் இந்த தலைப்பு.

எங்க பள்ளியில் நல்ல கருப்புச் சட்டை, சிவந்த பெரிய கண்கள், கூரிய நாசி, சில சமங்களில் மெல்லிய தாடி, வெள்ளைப் பேண்ட் அல்லது வெள்ளை வேஸ்டி எங்காவது தெரிந்தால் கண்டிப்பாய் சொல்லிவிடலாம், அது வடிவேல் அண்ணன் தான். அவர் எங்க பள்ளியின் உதவியாளர் (பியுன்). திராவிட இயக்கத்தின் மீது பற்று உள்ளவர்,பள்ளி சீருடைதான் அவருக்கும் என்றாலும் (காக்கி கால்சட்டை மற்றும் வெள்ளைச் சட்டை) அவர் கருப்பு வெள்ளையில் தான் வருவார், தலமை ஆசிரியரும் கேக்க மாட்டார்,கேட்டால், அவருக்கு அன்று மாலை ஒரு பாராட்டு விழா நடத்துவார். நாங்க எல்லாம் அவரை அண்ணா என்று கூப்பிட்டு வணக்கம் சொல்லுவேம், அதுக்கு இரண்டு காரனங்கள் இருந்தது ஒன்று அவர் எங்க வீட்டுக்குப் பழக்கம்(அப்பா கல்வித்துறை ஆதலால் பள்ளிக் கடிதம் மற்றும் தகவல் சொல்ல வருவார்). மற்றென்று (இதுதான் முக்கியம்)நாங்க பள்ளிக்கு லேட்டாப் போன நைசா கதவைத் திறந்து விடுவார். அவர் விடுவதற்கு இரண்டு காரணம் ஒன்று எங்க அப்பா, இரண்டு நான் ரொம்ப நல்ல பையன்(அப்பிடினு அவர் நினைப்பு) நல்லவர், அதிர்ந்து பேசமாட்டார்,பசங்களிடம் பாசமாக இருப்பார். வாத்தியார்கள் எது சொன்னாலும் செய்வார். தனது சைக்கிளில் தலை நிமிந்து மிதமான வேகத்தில் ஓட்டி வருவார்.ஆனா

இது எல்லாம் பள்ளி முடிந்து மாலை ஆறு மணி வரைக்கும்தான், ஆறுமணிக்கு மேல ஆகிடுச்சுனா
குடியின் உதவியால அய்யா அன்னியனா மாறிடுவார். அவர் சிவந்த கண்களுக்கு காரணம் தினசரி குடிதான். அப்ப திராவிட இயக்க சரித்திரம், புவியியல்,அறிவியல் எல்லாம் நல்ல தமிழ் வார்த்தைகளுடன் வரும். பெரும்பாழும் வழக்கமா திட்டு வாங்குற பார்ப்பான், பார்ப்பனியம் தான். அப்ப எங்க பள்ளியில நிறைய பார்ப்பன ஆசிரியர்கள். மாணவர்களை திட்டும் அவர்கள் எல்லாம் வடிவேலுவின் வாயில் மின்னல் வேகத்தில் நுழைந்து கசங்கி வருவார்கள். பள்ளி முடியும் சமயம் அவர்களிடம் மண்டை சொறிந்து அவர்களின் காசில்தான் அவர்களுக்கு அர்ச்சனை நடைபெறும்.அப்ப மாட்டுனா சும்மா காதுல இரத்தம் வர்ற வரைக்கும் வர்க்கப் போரட்ட கதைகள் தூய விளக்கத்துடன் கேக்கலாம். மறுனாள் காலை பழைய வடிவேல் அண்ணாவைப் பார்க்கலாம். மொத்தத்தில் குடிக்காம நல்லவர். குடித்தால் கோபவாதி. இப்ப புரிஞ்சுதா தலைமை ஆசிரியர் ஏன் கேக்க மாட்டார்னு.

ஒரு நாள் நாங்க வேதியியல் ஆய்வகத்தில் இருந்த போது அங்கு வந்த வடிவேலு அண்ணன் தலை செறிந்துகொண்டு நின்றார். எங்கள் வேதியியல் ஆசிரியர் ஒரு அந்தனர். அவர் உடனே என்னப்பா இன்னிக்கி நானா மாட்டுனன் என்று சிரித்துக்கொண்டு கேக்க வடிவேலண்ணன் அப்பிடி எல்லாம் இல்லை சார் என்றார். கொஞ்சம் மாசக்கடைசி காசு இல்லை, யாரும் கடனும் கொடுக்கலை, வேறவழியில்லை என்று தயங்க சாரும் உனக்கு இதே வேலையாப் போச்சு ரொம்ப இப்படி சாப்பிட்டினா உடம்பு கெட்டுப் போய்டும் என்றார். இந்த மாதிரி பண்ணிக் குடிக்காத என்று அட்வைஸ் பண்ணினார். அதுக்கு வடிவேலு மொளனமாக நிற்க ஆசிரியரும் சரி சரி மாலை ஆய்வகம் பூட்டுவதற்கு முன்னாள் நான் பீக்கரில் ஊற்றி ஜன்னலுக்கு வெளிய வைக்கிறன் என்றார். எங்களுக்கு குழப்பமாக இருந்தது. சாருகிட்ட ஏது சரக்கு என்று?. வடிவேலு தேங்கஸ் என்று சொல்ல ஆமா நீ குடுத்தா குடிச்சுட்டு எங்களை திட்டுவ, குடுக்களைனாலும் எங்களை திட்டுவாய் என்று சிரித்துக்கொண்டு சொன்னார். அப்புறம் தான் தெரிந்தது ஆய்வகத்தில் உள்ள ஸ்பிரிட் அல்லது ஈத்தரில் சார் தண்ணி கலர்ந்து டையலூட் பண்ணி வச்சுடுவார், வடிவேலண்ணன் அதில் எலுமிச்சை சாறு கலந்து சரக்கு ஆக்கி சாப்பிடுவார்னு.

இவரின் பையன் வீரமணி, குணத்தில் தங்கம், நல்ல பழக்கங்களுக்கு உதாரனம். நல்ல கருப்பு என்றாலும், களையாக புன்சிரிப்புடன் காணும் அழகன். எனக்கு இரண்டு வருட ஜூனியர் என்றாலும் நான் அமராவதி ஆற்றுக்கு குளிக்க செல்லும் போது எல்லாம் சிரிப்பார், ஒன்று இரண்டு வார்த்தை பேசுவார். அவர் கையில் எப்பவும் புரட்சிப் புத்தகங்கள் அல்லது பெரியார் புத்தகங்கள் இருக்கும். நானும் அவரின் பாடப்படிப்பு பற்றிப் பேசிவிட்டு வருவேன். படிப்பில் மகா கொட்டி. முதுனிலை பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.அவரும் தன் தந்தையின் வழியாக பகுத்தறிவுவாதி. இதுகுறித்து நான் அவர், சிலுவை அணிந்த அவரின் நண்பன் மூவரும் விவாதம் செய்வேம்(அதான வாய வச்சுட்டு சும்மாயிருக்க மாட்டனே). நானும், அவரின் நன்பரும் சேர்ந்து அவரிடம் பகுத்தறிவு சிந்தனைகளைக் கலாட்டா செய்வேம், சளைக்காமல் ஈடுகொடுப்பார். ஆனாலும் அவரின் புன்சிரிப்பு மாறாது. ஒரு நாள் அவர்(வீரமணி) கலங்கிய முகத்துடன் ஒரு வார தாடியுடன் இருந்தார். நான் பதறிப் போய் கேக்க அவர், அவரின் சேகம் கலர்ந்த சிரிப்புடன் சொன்னார். ரெண்டு கிட்னியும் புட்டுக்கிச்சு பாஸ், டாக்டர் நமக்கு இரண்டு மாசம் கொடு வச்சுட்டார்னு.
பின் சில நாள் கழித்து இருபத்தி நாலாம் வயதில் அவர் மரணமடைந்தார். அவரின் இறுதி சடங்கு திராவிட கலாச்சாரத்தின் படி கேலாகலமாக பெரிய சப்பரம் செய்து சுற்றிலும் உதயசூரியன் போல தி.க மற்றும் தி.மு.க கொடிகளை வைத்துருந்தனர். ஆட்டம்,மேளம், வாணவேடிக்கைகளுடன் அமைதி இறுதி ஊர்வலம் சென்று அடக்கம் செய்தனர். நான் ஒரு ஓரமாக நின்று நண்பனின் ஊர்வலத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன். இப்படியாக அவர்களின் அமைதி ஊர்வலத்தை முடித்தனர்.நானும் வேலை நிமித்தமாக வெளியூருக்கு வந்துவிட்டேன்.
கொஞ்ச காலம் கழித்து நான் பள்ளி அருகில் சென்றபோது வடிவேலண்ணனைப் பார்த்தேன். சேகம் ததும்பிய கண்களுடன் வெள்ளைச் சட்டை காக்கி பேண்ட்டில் நிறைய தாடியுடன் மிக மெதுவாக சைக்கிள் ஓட்டி வந்தார். எனக்கு ஆச்சிரியமாக இருந்தது அவரின் உடை மாறியது பற்றி. நான் அவரிடம் வணக்கம் அண்ணா எனக்கூற அவர் சைக்கிளை நிறுத்தாமல் ஒரு வறட்டுப் புன்னகை சிந்தி சென்றார். நான் அருகில் இருந்த என் உயிர் நண்பனிடம் என்னடா இது என்று கேக்க அவனும் இப்ப எல்லாம் இப்படிதாண்டா அவர் கருப்பு சட்டை போடுவது இல்லை அதே சமயம் கோவிலுக்கும் போவது இல்லை. இப்போது எல்லாம் குடித்தால் சுருண்டு படுத்துக்குவார் யாரிடமும் பேசமாட்டார் அப்படி யாரது பேசினால் இதுபோல வறட்டு சிரிப்பு சிரிப்பார் என்றான் சலனம் இல்லாமல். நான் அதிர்ந்து நின்றேன் சலனத்துடன். எனது நண்பனைப் போல் ஒரு பிள்ளையை பறிகொடுத்துவிட்டு உயிர் வாழ்வது கூட ஆச்சரியம்தான்.

No comments:

Post a Comment

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.