Monday, December 14, 2009

சபரிமலை யாத்திரை

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது பயணம் வெற்றிகரமாகவும், நல்ல படியாகவும் முடிந்தது. குறிப்பாக என் அய்யப்பனை கண் குளிர, மனமார ஸேவித்து வந்தேன். கடந்த 04.12.09 அன்று நான் சென்னை சென்று, அண்ணா வீட்டுக்குச் சென்று அங்கு இரு தினங்கள் தங்கினேன். அவர்கள் இரு வயது குழந்தை ஷ்ரவ்யா(ஷ்ரவீஸ்டா நட்சத்திரம்) என்னும் பொண்மணி (பெயர்)என்னுடன் நல்லா ஒட்டிக் கொண்டாள். நான் இரு தினங்கள் செய்த பூஜையினைப் பார்த்து இப்ப அவ சாமிய்யோ சரணம் அய்யப்பா என்று சொல்ல ஆரம்பித்து விட்டாள். நல்ல சுட்டியான, அய்யப்பன் அருளால் பிறந்த குழந்தை அவள். பொண்மணி என்னும் அவள் பெயர், பொண் எங்கள் குலதெய்வம் பொங்காளியம்மனையும், மணி என்பது மணிகண்டன் என்ற அய்யப்பனின் பெயரைக் குறிக்கும். நல்ல அறிவும், மிக புத்திக் கூர்மையும் உடைய பெண்ணாகவும் உள்ளாள். என் இரண்டாவதுஅண்ணி எனக்குப் பிடித்த ஆப்பம் தேங்காய்ப் பால், அரிசி உப்புமா, மற்றும் சுண்டைகாய்+ மணத்தக்காளி வத்தக்குழம்பு, பருப்புத்தொகையல், மற்றும் மிளகு இரசம் பண்ணிக் கொடுத்தார். கடைசி கிளம்பும் நாளில் அவியலும் செய்து கொடுத்தார். முதல் அண்ணியும் அங்கு இரு தினங்கள் நல்லா சாப்பாடு செய்து கொடுத்துக் கவனித்துக் கொண்டார்கள். மொத்ததில் நாலு நாள் நல்ல வேட்டைதான்.

08.12.09 அன்று நாங்கள் எங்கள் ஊர் தாராபுரத்தில்,தென் தாரையில் உள்ள சின்னக் காளியம்மன் கோவிலில் இருமுடிக் கட்டு முடித்து பயணம் கிளம்பும் போது மணி மணி மூன்று பத்து.








நான் கட்டு கட்டும் படங்கள்
அப்போது இராகு காலம் என்பதால் சாமிகள் அனைவரும் படுத்து ஓய்வு எடுத்து பின் நாலரை மணிக்குக் கிளம்பி ஆஞ்சணேயர் கோவில் பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து யாத்திரையைக் கிளம்பினேம். பின் சாலக்கடையில் உள்ள பிள்ளையார் மற்றும் கருப்பண சாமி கோவிலில் சாமி கும்பிட்டு, வழினடைக் காவலுக்காக வேண்டி யாத்திரை தொடங்கினேம். ஒட்டன் சத்திரம் பஸ் நிலையம் அருகே கடையில் மிளாகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, டீ சாப்பிட்டேம். பின் குமுளி சோதனைச் சாவடி அருகே ஒரு கோவில் மண்டபத்தில் நாங்கள் கொண்டு சென்ற உப்புமாவை உண்டு. இரவு பன்னிரண்டு மணியளவில் எருமேலி சென்று பேட்டை துள்ளும் நிகழ்வை நிகழ்வு முடித்துப், பின் அதிகாலை ஜந்து மணியளவில் பம்பையை அடைந்து அதிகாலைக் குளியல் முடித்து பூஜைகள் முடித்துக், காலை ஆறரை மணிக்கு பம்பா கணபதியைச் வணங்கி மலை ஏறத்தொடங்கினேன்.

காலை ஏழரை மணிக்கு நீலி மலை, அப்பாச்சிமேடு, இப்பாச்சிக்குழி தாண்டி, சபரி பீடத்தை அடைந்தேன். இந்த வருடம் எனது பிரார்த்தனைகள் நிறைவேற நான் மலை அடிவாரத்தில் இருந்து அய்யனைக் காணும் வரை தலையில் உள்ள இருமுடிக் கட்டை இறக்குவது இல்லை எனவும், அது வரை நீர் கூட அருந்துவதில்லை எனவும் முடிவு செய்தேன். வழக்கமாக நான் அப்பாச்சி மேட்டில் தங்கி, பைனாப்பிள், எழுமிச்சை சாறு, குளுக்கேஸ் சாப்பிடுவது வழக்கம். அதன்படி நானும் என் நண்பன் முரளி சாமியும் கட கட வென ஏறி சபரி பீடத்தை அடைந்தேம். அதன் பின்னர் அங்கு இருந்து சோதனையாக, வரிசை ஆரம்பம் ஆகியது. நல்ல கூட்டம் வேறு. டிசம்பர் 6 முன்னிட்டு பாதுகாப்பு கொடுபிடிகள் வேறு. மொத்த கூட்டத்தையும் இரண்டு மெட்டல் டிடக்டர் வழியாக மட்டும் அனுப்பியதால் சராசரியான கூட்டம் கூட மிக காலதாமதமானது. சபரி பீடத்தில் ஆரம்பித்து சரங்ககுத்தி வழியாக வரிசை நகர்ந்தது. கூட்டத்தில் முட்டி மோதி, நசுங்கி, பின்னர் பாதை சரியயில்லாத காரணத்தால் பலரும் கூட்டத்தில் கீழே பார்க்க முடியாமல் கற்களில் காலில் அடிபட்டனர். நூற்றுக்கணக்காவர்கள் அடிபட்டதாகப் பத்திரிக்கைகள் கூறின. மதியம் பன்னிரண்டு பதினைந்துக்கு அய்யப்பனை நல்ல நிறைவாக தரிசனம் செய்துவிட்டு வெளிவந்த உடன் அங்கு தரும் மிதமான சூட்டில், சுக்கு, மல்லி மற்றும் மூலிகை நீரை நல்லா நாலு டம்ளர் குடித்து என் மலையேற்றதை முடித்துக் கொண்டேன். பின்னர் இரவு நிலக்கல் அடைந்து குற்றாலம் நோக்கி பயணித்தேம்.

ஆறு மணி நேரம் கியூ காரணமாக எங்கள் பயணத்தில் மாறுதல் செய்து, திற்பரப்பு நீர்வீழ்ச்சி, மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களைக் கான்சல் செய்து, குற்றாலம் மற்றும் நெல்லைப்பர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்து, இரவு ஒரு மணிக்கு குற்றாலம் அடைந்தேம். நல்ல தண்ணிர் கொட்டியது. சாரலும், பனியும் இல்லாமல், அருவியில் நிறைய நீரும் கொட்டியது மிகவும் மகிழ்வாய் இருந்தது. நான் பிசாசு மாதிரி இரவு இரண்டு முதல் மூன்று மணி வரை ஆட்டம் போட்டேன். சக பக்தர்கள், காவலர்கள் தொல்லை என எதுவும் இல்லாமல் நன்றாக குளித்தது, மனதுக்கு இதமாக இருந்தது. (இது எனது நண்பன் முரளி சாமியை நான் சென்ற வருடம் எடுத்த படம், இந்த வருடம் இதுபோல மூன்று மடங்கு தண்ணீர் கொட்டியது.) அருவியின் பகுதியில் மையப் பகுதியில்,அடர்த்தியாக தண்ணீர் கொட்டிய இடத்தில் நின்ற போது, ஆயிரம் சரவெடி வெடிக்கும் சமயத்தில் அதன் மையத்தில் நின்றது போல இருந்தது. மிக அருமை. உடல் வலி, கால் வலி களைப்பு தீர ஒரு நல்ல குளியல் போட்டோம்.அங்கு நேந்திரம் சிப்ஸ், அல்வா வாங்கினேம். பின்னர் திருனெல்வேலி நெல்லையப்பர் தரிசனம் முடித்து கன்யாகுமரி சென்றேம். இதன் தொடர்ச்சியை நாளை மீண்டும் பதிவு இடுகின்றேன். நன்றி

டிஸ்கி: நேரம்மின்மை காரணமாக எனது முந்தைய பதிவுகளைக்கு பதிவு இட்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன். முதல் பின்னூட்டம் இட்ட கோமதி அரசு மற்றும் மாதேவி அவர்களுக்கும் எனது நன்றிகள். மாதேவி அவர்களின் சமையல் பதிவகள் நன்றாக உள்ளது. அவர் பீட்ரூட் குறித்த பதிவு, மிகவும் பயன் உள்ளது. அனைவரும் படிக்கவும். சத்தான பதிவு அது. மனம் நிறைந்த நன்றிகளுடன் சுதாகர்.

19 comments:

  1. வாழ்த்துக்கள் ......

    ReplyDelete
  2. பயணம் இனிதாக முடிந்ததில் சந்தோஷம்.எங்களுக்கெல்லாம் சிப்ஸ்,அல்வா கிடையாதா?அதற்காக உண்மையிலே அல்வா கொடுக்ககூடாது...

    ReplyDelete
  3. ரொம்ப சந்தோஷம். பயணம் இனிதே முடிஞ்சது. வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  4. வாங்க வாங்க பயணம் இனிதாக முடிந்ததில் சந்தோஷம்.

    அப்ப இனிமே நீங்க சாமி இல்லை, ஒரு மாசமா அடக்கி வச்சவுங்க எல்லாம் இனி திட்டலாம் :-) அப்படித்தானே?

    ReplyDelete
  5. சந்தோஷம்,
    வாழ்த்துகள்

    ReplyDelete
  6. உங்க பயணம் ஐயப்பன் அருளால நல்லபடியா முடிஞ்சதில சந்தோஷம் அண்ணா.

    பதிவு நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. நமக்கு பிரசாதம் பார்சல் பண்ணி அனுப்புறது...

    ReplyDelete
  8. பயணம் இனிதாக முடிந்ததில் சந்தோஷம்
    உங்கள் இடுக்கை மூலம் எங்களையும் சபரி யாத்திரை அழைத்து போனதிற்கு நன்றிகள் பல!!

    ReplyDelete
  9. பயணம் நல்லபடியா முடிஞ்சதுல சந்தோஷம்

    ReplyDelete
  10. நன்றி மகா,
    நன்றி மேனகா சத்தியா, எனக்கு அல்வா கொடுத்துதான் பழக்கம். ஆதலால் எல்லாருக்கும் அல்வா இல்லாமல் அல்வா வாங்கிக்குங்க.
    நன்றி துளசி டீச்சர்,
    நன்றி சிங்ககுட்டி, நீங்க எல்லாரும் தாராளமா எப்ப வேணா விமர்சிக்கலாம், அப்பதான் திருத்திக் கொள்ள முடியும்.
    நன்றி ஞானப்பித்தன், திருத்திக் கொள்கின்றேன்,
    நன்றி தியாவின் பேனா,
    நன்றி சுசி, குழந்தைகளும், குணா மாப்பிள்ளையும் நலமா?,
    நன்றி ஜெட்லி பார்சல் வருல்லையா?
    முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சரவனக் குமார்,
    நன்றி சின்ன அம்மினி, நியுஸி இப்ப ரொம்ப குளிரா? எப்படி இருக்கீங்க?
    நன்றி கோ.வி அண்ணா, மின்னஞ்சலில் வாழ்த்துக்கள் கூறியமைக்கு.
    நன்றி அழகன், மின்னஞ்சலில் வாழ்த்துக்கள் கூறியமைக்கு.

    பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  11. ஆகா! பதிவும் போட்டாச்சா!

    நேந்திரம் பழம்,அல்வா எப்ப தர்றிய!?

    உங்கள சந்திக்கும் போது நீங்க புலியோட இருந்தா நான் வரமாட்டன்!

    ReplyDelete
  12. ஓ! அப்படியே ஒரு சுற்றுலாவும்.. அருமை. வீடு சாப்பாடு சாப்பிட்டு உடம்பு ஏறி இருக்கனுமே? :-)

    ReplyDelete
  13. உங்கள் blog -க்கு நான் புதிது. நீங்கள் மலை ஏற போயிருந்த பொழுது நான் உங்கள் ஐயப்பன் பற்றி உங்களின் பதிவுகள் அனைத்தையும் படித்தேன். ஐயப்பன் அருளால் உங்களின் பிராத்தனைகள் நிறைவேற வேண்டும். நீங்கள் கொல்லூர் மூகாம்பிகா கோவில் போனதுண்டா? நானும் என் குடும்பத்தினரும் மூகாம்பிகை பக்தர்கள். Dec- 2007 கொல்லூர் சென்று வந்தோம். மீண்டும் வாய்ப்பு கிடைக்க எதிர் பாத்திருக்கிறோம். உங்கள் பயணம் நன்றாக முடிந்ததில் சந்தோசம்.

    ReplyDelete
  14. நன்றி ரோஸ்விக், சாப்பிட்டேன், குண்டாகும் அளவுக்கு சாப்பிடவில்லை.
    நன்றி கலைசேகரன், நான் இன்னமும் கர்னாடகா தலங்களுக்கு சுற்றுலா சென்றதில்லை. ஆனால் மந்திராலயம்,நவபிருந்தாவனம், அகோபிலம்,உடுப்பி,ஆகும்பே மற்றும் தர்மஸதலா பேன்ற இடங்களுக்கு செல்ல ஆசை உள்ளது. எப்போது சமயம் வரும் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  15. நன்றி ஜோதிபாரதி, உங்களுக்கு கொடுக்காத அல்வா உண்டா? பயப்படாமல் வாருங்கள். எனக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை.

    ReplyDelete
  16. உங்கள் பயணம் இனிதாக முடிந்ததில் மிகவும் சந்தோசம்

    ReplyDelete
  17. உங்கள் சுகமாய் முடித்து வந்ததில் சந்தோசம்!!

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.