2036 ஆம் வருடம்,மார்கழி மாதம்,அதிகாலையில் தூக்கத்தில் ஆழ்ந்துருந்தேன்.அப்போது பார்க்க பயங்கரமான,விகாரமான தோற்றம் உடைய இருவர் என்னிடம் வந்தார்கள். அவர்கள் "வா எங்களுடன்", என்று கூறி என்னைத் தர தரவென இழுத்துச் சென்றார்கள். (உரையாடல் முழுதும் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்).
காட்சி-1 (வானவீதியில்)
நான்: ஆமாஆஆஆ நீங்க யாரு?
கிங்கரர்கள்: நாங்கள் யமதூதர்கள். உன் உயிரைப் பறித்துப் போகின்றேம்.
நான் : என்னது உயிரை எடுத்துட்டீங்களா,சொல்லவேயில்லை.
கிங்கரர்கள்: சொல்லிட்டுச் செய்ய நாங்க என்ன தமிழ் சினிமா ஹீரோவா, பஞ்ச் டயாலக் பேசி உயிரை எடுக்க.
நான் : ஆமா, ரம்பா,ஊர்வசி,மேனகா எல்லாம் நல்லா இருக்காங்களா.
கிங்கரர்கள் : நீ கொஞ்ச நேரம் வாயை அடைத்துக் கொண்டு வருகின்றாயா?
நான் : என்னது நீங்க வந்துருக்கிங்க, தேவதூதர்கள்,புஷ்பக விமானம் எல்லாம் வராதா?
கிங்கரர்கள்: அடேய் நீ பண்ணிய பாவங்களுக்கு,கெட்ட கேட்டுக்கு அவங்க எல்லாம் வரனுமா?.சும்மா பிணாத்தாம வாடா.
நான்: ஆமா எவ்வளவு தூரம் போகனும்?.நான் இன்னமும் கடவுளும் கோவில்களும் கட்டுரை கூட எழுதி முடிக்க வில்லையே.
கிங்கரர்கள்: அடேய்,எங்க பொறுமையை சோதிக்காதே. பேசாம வா.
நான்: போகின்ற வழிக்கு பொழுது போகனும் இல்லை.
கிங்கரர்கள்: சூலாயுத்தால் வாயில் இடித்து,இப்ப நீ வாயை மூடலைன்னா,அடிச்சே கிழிச்சுடுவேம்.எப்படி வசதி.
நான் : அய்யோ, ஆத்தாடி, என்று கப்சிப்.

காட்சி - 2 (எமலோகத்தில் எனது இறுதி தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது).
சித்ரகுப்தன்: மன்னா,இவன் ஒரு ஜெகஜாலக் கில்லாடி, நல்லவன் போல நடிப்பவன். இவனை எமலோகத்தில் விட்டு அனைத்து தண்டனைகளும் தரவேண்டும்.
யமன்: அது என் வேலை, நீ முதலில் இவனது குற்றங்களைப் படி.
நான் : அடப்பாவிகளா, இங்கனயும் பதவிப் போட்டியா?.
கிங்கரர்கள்:உஷ் வாயை மூடிக்கொள். இல்லை என்றால் உன் தண்டனை இரு மடங்கு ஆகிவிடும்.
நான் : சரி அப்பு.
சித்ரகுப்தன்: மன்னா சொல்ல அசிங்கம், இவன் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது.....
யமன் : சரி,சரி, இரகஸ்யங்களை சப்தம் போடாதே. வாலிபக் குறும்பு. இதுக்கு தண்டனையா, இவனை தகிக்கும் தங்க பதுமையைக் கட்டி அனைக்கச் சொல்லி வறுத்து எடுப்போம்.
நான் : அடப்பாவமே, நான் எப்பவும் தங்கம் என் உடம்பில் கூடப் போட்டதே கிடையாது. கட்டிக்க தங்கப் பதுமையா?. பூலோகத்தில் அப்புறம் ஏன் தங்கம் விலை ஏறாது. சரி இங்கனயாது போட்டுக்குவேம்.
கிங்கரர்கள்: அடேய் அது சூடான கொதிக்கும் தங்கப் பதுமைடா.
சித்ரகுப்தன்:அதுமட்டும் இல்லை இவன் சென்னையில் குடித்துவிட்டு, ஒருமுறை.......
யமன்: அடேய்,கஸ்மாலம், கேப்மாரி,முடிச்சவிக்கி,டாமர் உன்னை....
சித்ரகுப்தன்: மன்னாஆஆஆ.. என்ன ஆச்சு தங்களுக்கு உளறுகின்றீர்கள்.
யமன்(சுதாரித்து): ஒன்றுமில்லை,சென்னை என்றவுடன் அதன் பாஷை ஒட்டிக் கொண்டது.இதுக்கு தண்டனையாக இவனை நாலு கிங்கரர்களை விட்டு முள்ளுச் சவுக்கால் பரேட்டாவைப் போல அடித்து புரட்டி எடுங்கள்.
சித்ரகுப்தன்: மன்னா இதையும் கேளுங்கள்,கல்பாக்கத்தில் இவன்........
யமன்: அடேய் போதும், போதும் இந்தக் குற்றத்திக்கே இவன் நரகத்தில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.இதுக்கு தண்டனையாக இவனை எண்ணைச் சட்டியில் போட்டுப் பொறிக்க வேண்டும்.
சித்ரகுப்தன்:இது மட்டும் அல்ல மன்னா, சிங்கப்பூரில் இவன் பதிவு என்ற பெயரில் கண்டதையும் எழுதி,தானும் குழம்பி,மற்றவர்களையும் குழப்பி உள்ளான்.ஒரு முறை இவன் பதிவர்களிடம்......
யமன் : அடேய்ய்ய், மேலே சொல்லதே,என் வாயில் கெட்ட வார்த்தை வந்துவிடும்,இதுக்கு இவன் நாவை அறுத்துச் சுக்கா வறுவல் பண்ணுங்கள்.
நான்: என்னது இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. இதுக்கு முன்னால இவரு புரோட்டாக் கடையில் மாஸ்டரா இருந்தாரா?. வறுக்கனும்,பொறிக்கனும்,கைமா போடனும்,வறுவல் போடனும் அப்படின்னு தீர்ப்பு சொல்றார்.
யமன் : அடேய் நரனே. என்ன தைரியம் இருந்தால் என்னை புரோட்டா மாஸ்டர் என்பாய். இதுக்கு உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
கிங்கரன்: கேட்டாயா, வாயை வைச்சுக் கிட்டு சும்மாயிருந்தா,இப்படி நடக்குமா?
நான் : இல்லைனாலும்,அடப்போய்யா.. நாங்க எல்லாம் எத்தனை பேரைப் பார்த்துருக்கேம்.
சித்ரகுப்தன்: மன்னா,என்ன ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள்.
யமன்: இந்த நரனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும், என்ன தண்டனை என்ற குழப்பத்தில் உள்ளேன்.
நான்: அப்பாடா, வந்த வேலை முடிஞ்சது. எதே நம்மளால முடிஞ்சது. குழம்பி தீர்வதுக்குள் எஸ் ஆகனும். எப்படிய்ய்ய்.
சித்ரகுப்தன்: மன்னா, இந்த மூன்று தண்டனைகளும் ஒரே காலத்தில் கொடுப்போம். அல்லது தண்டனைக் காலத்தை இன்னமும் அதிகரிப்போம்.
நான்: அடடா, மன்னர் குழம்பினாலும் இந்த அல்லக்கைகள் விடாது போல இருக்கே. சரி சமாளிப்போம். எவ்வளவே பார்த்துட்டேம்,இது என்ன..
யமன்: மிக மிக கடுமையான தண்டனையாக இருக்கவேண்டும்,அதைப் பார்த்து எவனும் என் முன் வாயைத் திறக்கக் கூடாது.
நான் : .... நாட்டுல ... ஆட்சியில அமைச்சரா போடுவாரா? வாயைத் திறக்காமல் இருக்க...
கிங்கரன்: அடேய் உன் தப்புக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகின்றது.வாயை மூடு.
யமன்: ஆகா கண்டுபிடித்து விட்டேன், மிக கொடுமையான தண்டனை, யாரும் வழங்காத தண்டனை. அற்புதமான, ஆளைப் பையித்தியம் பிடிக்க வைக்கும் தண்டனை.
சித்ரகுப்தன் : ஆவலுடன் மன்னா என்ன அது மன்னா, சொல்லுங்கள்.
நான்: அடாடா,வில்லங்கமா இருக்கும் போல, சரி பொறிக்கறது வீட பெரிசா என்ன தண்டனையைத் தரப்போறானுங்க.
யமன்: டேய் நரனே, அடுக்கடுக்காய் பாவங்கள் பண்ணியது இல்லாமல்,என்னையே கிண்டல் பண்ணத் துனிந்த உனக்கு அதிக பட்ச தண்டனை வழங்குகின்றேன். இதை அனுபவித்து நீ பைத்தியம் பிடித்து அனு அனுவாய் சித்தரவதைப் படுவாய்.
நான் : என்ன தண்டனைன்னு சொல்லாம, புதிர் போட்டா எனக்கு என்ன ஜோசியமா தெரியும்.
யமன்: கோபமாக,சத்தமாக எழுந்து நின்று, அடேய் நரனே, உனக்கு இந்த தண்டனைதான் பொருத்தம். நீ இங்கு இருக்கும் காலம் எல்லாம் தினமும், நீ எழுதிய பதிவுகள் எல்லாத்தையும் நீயே உக்காந்து படிக்க வேண்டும். இதுதான் நான் உனக்கு வழங்கும் தண்டனை.
நான் : பதட்டமாக, சத்தம் போடத்துவங்கினேன்.அய்யோ அய்யோ அது மட்டும் வேண்டாம், நீங்க சொன்ன எல்லா தண்டனைகளும் ஒட்டு மொத்தமாக தாருங்கள், ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம் என்று கத்தி கண்விழிக்கின்றேன்.
(பக்கத்தில் படுத்துருக்கும் தங்கமணி, அப்பப்பா!! தூக்கத்தில் கூட பதிவா? உங்களுக்கு பைத்தியம்தான் போங்க என்று அங்காலாய்த்துத் திரும்பிப் படுக்கின்றார்).
டிஸ்கி: சும்மா கடவுள்,கோவில் குளம்ன்னு போடாம. நகைச்சுவையா ஒரு சின்ன பதிவா
போடலாம்ன்னு பார்த்தா! அப்படியே எனது கற்பனை வளம் ஊறிப் பெருக்கு எடுத்ததில் பெரிதாகி விட்டது. எனக்காக எவ்வளவே சகிச்சுக்கிற நீங்க, இதையும் சகிக்க மாட்டீர்களா?. ஆனா ஒன்னுங்க, என் பதிவை விடாம படிக்கின்ற, நீங்க எல்லாரும் ரொம்பாஆஆஆ நல்லவங்க......... நன்றி. தொடராது. (ஹி ஹி தொடரும் போட்டு பழக்க தோசம்தான் )