Wednesday, December 30, 2009

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 7

சென்ற பதிவின் படங்களைப் பார்த்து அதன் இயற்கை அழகை மிகவும் இரசித்தீர்கள் அல்லவா. அழகுதான் ஆபத்து என்று சொல்வது போல, இந்த மலையில் இந்த அழகிய இடம்தான் மிகவும் ஆபத்தான இடம். இங்கு வனவிலங்குகள் அதிகம் என்றாலும் யாரும் அவை தாக்கி இறந்தது கிடையாது.ஆனால் இங்கு அவ்வப்போது அடிக்கும் பனிபுயல் மிகவும் ஆபத்தானது. இந்தப் பனிப்புயலில் கனத்த உடலை ஊடுருவும் குளிர் காற்று புயல் போல சுழன்று அடிக்கும்.நமது நெஞ்சை ஊடுருவி அடிக்கும் காற்று இதயத்தை உறைய வைக்கும்.சில சமயம் நம்மை விறைப்படையச் செய்ய வைக்கும் காற்று ஆளைத் உருட்டிப் பள்ளத்தாக்கில் தள்ளிவிடும்.இந்தப் பனிப்புயலில் சிக்கி பலரும் இறந்துள்ளனர்.இந்தப் பனிப்புயல் அடிக்கும் போது அனுபம் மிக்கவர்கள் அங்கு இருக்கும் குகைகளில் சென்று பதுங்கிக் கொள்வார்கள்.இல்லை என்றால் காற்று அடிக்கும் திசையில் பாறைகளின் பின்னால் குறுகி உக்கார்ந்து கொள்வார்கள்.கனத்த ஊய் என்ற ஓசையுடன் அடிக்கும் பனிப்புயல் ஒன்றுதான் இங்கு ஆபத்தானது. என் தந்தை ஒருமுறை இந்தப் பனிப்புயல்லில் சிக்கி பாறைகளின் பின்னால் பதுங்கித் தப்பித்தார். அனால் அவர் நுரையிலில் தாக்கிய பனி ஒருவாரம் தொடர் குளிர் காய்ச்சலில் விட்டது. என் அண்ணாவும் ஒருமுறை இதில் சிக்கினார்.ஆனால் அனுபவம் மிக்க குழுவினருடன் சென்றதால் ஒரு குகையில் தங்கி,எந்தவித பாதிப்பும் இல்லாமல் திரும்பினார். நான் சென்ற போது எல்லாம் பனிப்புயல் அடிக்கவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்.

ஆண்டி சுனையில் இந்தக் குடிசையில் அந்த இரவில் பதினோரு மணியளவில் தங்கினோம். நானும் என் அண்ணாவும் போர்த்திக் கொள்ளவோ அல்லது காதுகளை மூட மப்ளர் இல்லாததால் குளிரில் தங்கினோம். உடன் வந்த நண்பர்கள் சாக்கை விரித்துப் பாலித்தீன் ஷீட் மூடி படுத்து உறங்கி விட்டனர். நான் என் கனத்த டீ சர்ட்டை தலை மீது போர்த்தி காதுகளை மூடி, மூக்கின் முன்புறம் பட்டன் மூடும் படி செய்து படுத்துவிட்டேன். அனாலும் குளிர் கை,கால் எல்லாம் சிறிது நடுக்கத்துடன் படுத்துவிட்டேன். என் அண்ணா ஒரு இரண்டு மணி நேரம்தான் பொறுத்துக் கொள் அப்புறம் நடக்க ஆரம்பித்து விடலாம் என்று கூறித் தூங்க ஆரம்பித்தார். நான் கொஞ்சம் கண் அயர்ந்து இருப்போன். அப்பத் தான் அந்த சோதனை ஆரம்பித்தது. எனக்கு மிக அவசரமாக சிறுனீர்(இனி இதை உபாதை என்று சொல்கின்றேன்) கழிக்க வேண்டும் போல இருந்தது. கண் விழித்துப் பார்த்தால் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். எனக்கு நள்ளிரவில் தனியாக வெளியே போக பயம். ஒன்று காடு, எதாவது மிருகங்கள் வந்தால் என்ன செய்வது என்ற பயம்.நான் அடக்கிக் கொண்டு படுத்து உறங்க முயற்ச்சி செய்தால்,உறக்கம் வரவில்லை. குளிரும்,உபாதையும் என்னை வாட்டி அடித்தது. நான் எழுந்து தூங்கும் அனைவரையும் பார்ப்பது,பின் படுப்பதுமாக இருந்தோன்.இப்படி இருமுறைகள் செய்து விட்டேன்.குடிசைக்குள் உள்ளே நாங்கள் படுத்த இடத்திற்க்குப் பின்னால் நிறைய காலி இடம் இருந்தது.நான் அங்கு ஒரு மூலையில் கழித்து விடலாமா என்ற யோசனை.ஆனாலும் எனது நாகரிகமும்,பக்தியும் தடுத்தது. பல பக்தர்கள் வந்து தங்கும் இடத்தை அசுத்தம் செய்வதா என்ற எண்ணம் அதைத் தடுத்தது.

பின்னர் நான் துணிந்து (வேற வழியில்லாமல்) வெளியே சொல்லலாம் என்று நினைத்து எழுந்து அமர்ந்தோன்.குடிசையின் வெளியே இருந்த கும்மிருட்டும்,விலங்கு பயமும் திருப்பவும் பயமுருத்தின.நல்லவேளையாக என் அண்ணா எழுந்தவர் என்ன என்று விசாரித்தார். நான் விஷயத்தைக் கூற அவர் நான் வேனா கூட வரட்டுமா?என்றார்.இல்லை வரவேண்டியதில்லை. யாரது ஒருத்தர் முழித்து இருந்தால் போதும்,எதாவது என்றால் கத்தினால் ஆள் வேண்டுமே அதான் என்றேன்.அவர் குளிரில் எனக்கு உறக்கம் வரவில்லை.நான் கண்ணை மூடிப் படுத்து இருந்தேன்,நீ போய் வா என்றார்.நான் கையில் டார்ச் எடுத்து வெளியே வந்தேன்.வந்தவன் மூன்று விதமான அவஸ்தையில் மாட்டிக் கொண்டேன்.வெளியே கூதக் காற்று என்று சொல்வார்களே அதுபோல மிக்க குளிர் காற்று அடித்தது. நான் கழிக்க ஆரம்பித்த சில விநாடிகளில் என்னால் நிற்க முடியவில்லை.எனது உடல் நடுங்க ஆரம்பித்தது. நான் மைக்கேல் ஜாக்ஸன்,பிரபுதேவா, லாரன்ஸ் என அனைவரையும் தோற்க அடிக்கும் வண்ணம் டான்ஸ் ஆட ஆரம்பித்தது.மக்கா அப்ப மட்டும் போட்டி போட்டா நான் அனைவரையும் தோற்கச் செய்து இருப்பேன்.உள்ளே போக முடியாமல்,நீண்ட நேரம் அடக்கி வைத்ததால் வரும் நிறைய உபாதை வேறு. குறைந்தது மூன்று நிமிடங்கள் நிற்க வேண்டும். அனால் சில வினாடிகள் கூட நிற்க இயலாத நடுக்கம், டார்ச் வெளிச்சம் கண்டு மிருகங்கள் வந்து விடுமோ எனற பயம், என மூன்று விதமான சிக்கலில் மாட்டிக் கொண்டேன். நான் கொஞ்சம் துணிச்சலானவன்,இரவில் தனித்து ஊர் சுற்றக் கூடியவன், இருப்பது ஒரு உயிர் போவது ஒரு முறை என்று வீரவசனம் பேசியும் இருக்கின்றேன்(அடுத்தவனுக்கு சொல்ற அட்வைஸ்தான)அனாலும் அந்தக் குளிரும்,காடும்,கும்மிருட்டும் என்னைப் பயப்படுத்தியது. இயற்கையாது மண்ணாங்கட்டியாது என்ற எண்ணம் கூட வந்தது. நான் ஆடிய ஆட்டத்தில் (நடுக்கத்தில்) ஆர் டி ஓ டெஸ்ட் வைத்த மாதிரி என் டார்ச் வெளிச்சம் தரையில் எட்டு,ஒன்பது எல்லாம் போட்டது. எனது இதயத்தில் வலி போன்ற நடுக்கம் ஏற்ப்பட்டது. கை,கால்கள் எல்லாம் விரைக்கும் வண்ணம், பற்கள் கிட்டி,வாய் ஒட்டிப் போனது. ஒருவழியாக வெற்றி வீரனாக அவஸ்தையை முடித்துக் குடிசைக்குள் வந்தவன்,நிற்க முடியாமல் கை,கால்கள் விரைத்து, "ஜயம் எ டிஸ்கே டான்ஸர்" என பாட்டுப் பாடமல் ஆடிக் கொண்டு நின்றேன். கடகடவென்று பற்கள் அடிக்க ஆடிக் கொண்டு இருந்த என்னை என் அண்ணா என்னாச்சு என்றவர். நான் நடுங்கி விசயத்தைச் சொன்னேன். அவர் நின்றால் ரொம்ப குளிரும் படுத்துக் கொள் என்றார்.

நான் சுருண்டு படுத்துக் கொண்டேன். ஆனாலும் குளிர் என் கை,கால் எல்லாம் ஆயிரம் ஆயிரம் ஊசிகள் குத்துவது போல வலி எடுத்தது. மார்பு கனத்து மிகவும் வலித்தது. நான் நிச்சயமாக இறந்து விடுவேன் என்று நினைக்கும் அளவுக்குக் குளிரும்,நடுக்கமும் எடுத்தன. உடம்பு உதறித் தள்ளியது. . எனது எண்ணம் இறப்பைப் பத்தி யோசிக்க ஆரம்பித்தது. நான் இறக்கப் பயப்படவில்லை,ஆனாலும் இவ்வளவு தூரம் வந்து விட்டு சாமியைப் பார்க்காமல் போய்விடுவனே,"அப்பனே ஈஸ்வரா உன்னை தரிசிக்க வேண்டும்" என்று வேண்ட ஆரம்பித்து விட்டேன்.பின்னும் வயதான காலத்தில் தாய்,தந்தை இருக்க, அவர்களை துக்கத்தில் ஆழ்த்திப் போய் விடுவனே என்ற ரீதியில் நம்ம கற்பனைக் குதிரை தறி கெட்டு ஓடியது. பின்னர் நான் என் கைகள் இரண்டையும் பரபரவென தேய்த்து என் முகம்,மார்பு என தேய்த்து சூடு படுத்தினேன். கொஞ்சம் நல்லா இருந்தாலும் நடுக்கம் குறையவில்லை. எழுந்து உக்காந்து கை,கால்களையும் தேய்த்து விட்டேன். பக்கத்தில் இருந்த அண்ணா, என்ன ஆச்சு ரொம்ப முடியவில்லையா, ஆரம்பத்திலே சொல்ல வேண்டியதுதான என்றவர். எழுந்து தன் வாயை உப்பிக் காற்றை இரண்டு மூன்று நிமிடம் தம் கட்டி, தன் சூடான மூச்சுக் காற்றை என் காதுக்குள் ஊதினார். இப்படி என் இரு காதுகளிலும்,நாலு முறைகள் ஊதியதும் என் குளிரும்,உடல் அதிர்வும் நின்றன. அனாலும் மெல்லிய நடுக்கம் போகவில்லை. இந்த சத்தம் கேட்டு எழுந்த அண்ணாவின் நண்பரும், குழுத் தலைவரும் ஆன பரத்குமார் என்னை "ஏம்பா என்னை எழுப்ப வேண்டியதுதான" எனக் கேட்டுப் அவர் பையில் இருந்து குறுமிளகு பத்து எடுத்துக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். நான் சாப்பிட்டதும் நடுக்கமும் குளிரும் விட்டது. அவர் "நல்ல பையன் நீ, முதல்ல எழுப்பி இருந்தா இந்தக் கஷ்டப் பட வேண்டியது இல்லை அல்லவா?" என்றார். நான் நீங்கள் எல்லாரும் பயணத்தால் அயர்ந்து தூங்குகின்றீர்கள்,தொல்லை கொடுக்க வேண்டாம் என்று விட்டு விட்டேன் என்று கூறியவனிடம்,"அது எல்லாம் இல்லை,எனக்கும் குளிரில் தூக்கம் விட்டு விட்டுத்தான் வந்தது. சரி நீ தூங்கு" என்று அவரின் பாலித்தீன் ஷீட்டைக் கொடுத்தார். இருவரும் "இந்தக் கூதக் காற்றையே உன்னால் தாங்க முடியவில்லை.உனக்குப் பனிப்புயல் வேற அடிக்கவில்லை என்ற வருத்தமா", என்று கிண்டல் அடித்தனர்.நான் சிரித்து இதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம்தானே என்று நிம்மதியாக தூங்க ஆரம்பித்தேன். தொடரும் நன்றி.

10 comments:

  1. http://vaamukomu.blogspot.com/2009/05/blog-post.html
    நாங்களும் சென்றோம்,,ஆனால் விரிவாக எழுதாமல் படம் மட்டுமே போட்டோம்.

    உங்கள் கட்டுரை நன்றாக உள்ளது

    ReplyDelete
  2. பகிர்வும், படங்களும் அருமை.

    ReplyDelete
  3. பனி புயலப்பத்தி நீங்க சொன்னது பலருக்கு உபயோகமா இருக்கும் .....

    ReplyDelete
  4. சுதாகர் சார் 7 பதிவு போட்டு விட்டீர்கள் நேரம் இல்லாததால் இப்ப படிக்கல், பிறகு படித்து கருத்து தெரிவிக்க்கிறேன்.
    என் பதிவுலகம் போட சொன்னீர்கள் போட்டு விட்டேன். முடிந்த போது படித்து பாருங்கள்

    ReplyDelete
  5. //குளிரும்,காடும்,கும்மிருட்டும் என்னைப் பயப்படுத்தியது. //

    உங்களை பாத்தா பயபுடுற ஆள்
    மாதிரி தெரியிலையே.....

    ReplyDelete
  6. நன்றி வாய்ப்பாடி குமார். நல்ல இடம்.
    நன்றி மகா,
    நன்றி துபாய் இராஜா,
    நன்றி ஜலில்லா, பொறுமையாக படியுங்கள்.
    நன்றி ஜெட்லி, பயம் என்பது சூழ்னிலையைப் பொறுத்தது. மனிதனின் இயல்பான உணர்வு அல்லவா.

    ReplyDelete
  7. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
    என்றும் நட்புடன்..
    http://eniniyaillam.blogspot.com/

    ReplyDelete
  9. எவ்ளோ அழகான இடங்கள் அண்ணா.. நிஜமாவே அழகான ஆபத்துதான்.

    படிக்கவே பயமா இருக்கு. இருந்தாலும் தொடர்ந்து படிப்போம். எழுதுங்க.

    ReplyDelete
  10. மிக்க நன்றி , இது நம்ம ஆளு. முண்டாசுக் கவிஞநரின் இரசிகனாகிய நீங்கள் உண்மையில் நம்ம ஆளுதான்.
    மிக்க நன்றி,பைஸியாகாதர் (உங்கள் பெயரை ஒருமுறை தமிழில் டைப் செய்து சொல்லுங்கள்). உங்களுக்கும் புத்தாண்டு வளமாக அமையட்டும்.
    மிக்க நன்றி, சுசி, புத்தாண்டும் விடுமுறைக் கொண்டாட்டங்களும் முடிந்ததா?.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.