Thursday, January 14, 2010

சுண்டை வத்தல் ( பழைய ) சாதம்

ஆகா ஓரு வித்தியாசமா இருக்கட்டுமே என்று பழைய சாதத்தில் செய்யும் புளி சாத குறிப்புகளைக் கொடுத்தேன். ஆனால் இது வரை எந்த பதிவுகளுக்கும் இல்லாத வரவேற்ப்புகளைப் பெற்றது குறித்து ரொம்ப சந்தோசம். பதினேட்டு வாக்குகள், 3 பரிந்துரைகள் எனக் கலக்கி விட்டது. அனைவரும் செய்து சாப்பிடுவார்கள் என நம்புகின்றேன். எனக்கு மிகவும் பிடித்த, அம்மா அல்லது அண்ணி வீட்டில் இல்லாத மாலை அல்லது காலை நேரங்களில் நான் செய்து சாப்பிடும் இன்னும் ஒரு பழைய சாதப் பதிவு இது. அளவான வயிற்றைக் கெடுக்காத, அலுவலகத்தில் தூக்கம் தராத சாப்பாடு இது. இரண்டு முறைகளில் செய்யலாம் அவை :

தேவையான பொருட்கள் :

1.பழய சாதம்
2.சுண்டைக்காய் வத்தல்- 10
3.மனத்தாக்காளி அல்லது கறுஞ்சுக்குட்டி வத்தல்- ஒரு பிடி
4.மோர் மிளகாய் 5
5. பூண்டு ஜந்து பல்,
6.தாளிக்க - எண்ணெய்,கடுகு,கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்.
7. தயிர் 2 ஸ்பூன் (இரண்டாவது முறைக்கு).

செய்முறை(முதல்) :

முதலில் பூண்டைத் தோலுரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். அதன் பின் பழைய சாதத்தை உதிர்த்துத் தனித்தனியாக உதிரியாக்கவும். பின்னர் வாணலியை அடுப்பில் இட்டுச் சமையல் எண்ணெய்யை ஒரு ஜந்து அல்லது ஆறு ஸ்பூன் விட்டு கொஞ்சம் சூடு ஆகியதும் கடுகு,பூண்டு, பெருங்காயத்தூள், மோர் மிளகாய் போட்டு, ஒரு பிரட்டுப் பிரட்டிவிட்டுப் பின்னர் அதில் சுண்டைக்காய், மணத்தக்காளி, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். ( முக்கியமாக கவனிக்கவும் ) வத்தல் மற்றும் மோர் மிளகாயைச் சிவந்த பொன்னிறமாக அல்லது இளம் கருப்பில் தாளித்தால் நலம். தீய விடக் கூடாது. இப்போது இதில் உதிர்த்த சாதத்தைப் போட்டு கிளறவும். குழையாமல், அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும். கொஞ்சம் உப்பு (தேவைப்படும் அளவு) போடவும். சுண்டை வத்தலிலும், மனத்தக்காளி வத்தலிலும் உப்பு இருக்கும் என்பதனைக் கவனத்தில் கொள்ளவும். சூடான சுண்டை வத்தல் பழைய சாதம் ரெடீ. தேவைப் பட்டால் இதில் ஒரு சுவை மற்றும் பசவுக்காக ஒரு ஸ்பூன் நல்ல எண்ணெய் அல்லது ஒரு கரண்டி மோர் விடலாம். விருப்பம் உள்ளவர்கள் வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை (இரண்டு) :

இதில் முதலில் முன்னர் சொன்னது போல தாளித்துப் பழைய சாதத்தில் கொஞ்சம் அல்லது ஒரு கரண்டித் தயிர் விட்டுப் கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ரொம்ப கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தளர்க்கமாகப் பிசைந்து கொள்ளுங்கள்.பிசையும் போது சுண்ட வத்தல் மற்றும் மனத்தக்காளி வத்தலை அதிகம் பிசையாமல் பார்த்துக் கொள்ளவும், இல்லாவிட்டால் சாதம் கொஞ்சம் கசக்கும். இல்லை என்றால் உப்பு,தயிர் போட்டுப் பிசைந்து விட்டு,அதன் பின்னர் தாளித்துக் கொட்டிச் சிறிது பிசைந்து கொள்ளலாம். ( எனக்கு இதில் ஒரு கரண்டி வடுமாங்காய் ஊறுகாய் நீர் அல்லது அதில் இருக்கும் வண்டல் எண்ணெய், அல்லது எலுமிச்சை ஊறுகாய் அல்லது மாங்காய்(ஆவக்காய்) ஊறுகாய் மண்டியை(வண்டல்) இதில் விட்டுப் பிசைந்து சாப்பிடுவது பிடிக்கும்).


இந்த இரு சாதங்களுக்கும் தொட்டுக் கொள்ள எழுமிச்சை, ஆவக்காய் மாங்காய், வடுமாங்காய் ஊறுகாய்கள், தக்காளித் தொக்கு, இஞ்சி புளி ஆகியன நல்ல காம்பினேசன் ஆகும். நன்றி.

11 comments:

  1. சொல்லும் போதே நாவில் நீர் ஊறுக்கிறது
    ரொம்ப அருமையான குறிப்பு.

    ஆனால் என் பக்கம் வரவேயில்லை. அக்கர வடிசல் போட்டுள்ளேன். உங்காத்துல எப்படி செய்வீஙக்ன்னு தெரியல, இது சாப்பிட்ட ருசிய வைத்து நான் செய்வது.

    வந்து கருத்தை சொல்லிட்டு அப்படியே மறக்காம ஓட்டும் போட்டு விட்டு போங்க.

    ReplyDelete
  2. ஆகா வாய்யூருதே. அதிலும் மாங்காய் தொக்கோடு ம்ம் செமடேஸ்டா இருக்கும்போல சூப்பர் குறிப்பு.

    ReplyDelete
  3. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  4. இங்க கிடைக்காத காய்கறிகள்ள சமையல் குறிப்பு போடுற உங்க கனவில்தான் பூதம் வரும் :((

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  5. நீங்களும் சமையல் குறிப்பு போட ஆரம்பித்து விட்டிர்களா?அடுத்து படத்துடன் போடுங்கள்.

    ReplyDelete
  6. பின்னாடி யூஸா இருக்கும்னு இப்பவே ப்ராக்டீஸ் பண்றீங்களா:) கேட்க நல்லா தான் இருக்கு இந்த குளிரில் எப்படி பண்றது:(

    ReplyDelete
  7. இனிய பொங்கல் வாழ்த்துக்கள். நல்லாச் சமையல் செய்வீர்கள் போலிருக்கிறதே. படிக்கவே சுவைக்கிறது.

    ReplyDelete
  8. மாதம் முழுதும் போக முடியவில்லை. மன்னிக்கவும். பின்னால் ஒட்டு மொத்தமாக படித்து விடுகின்றேன்.

    நன்றி மலிக்கா, சாப்பிட்டுப் பாருங்க, அப்புறம் அதன் ருசிக்கு அடிமையாகி விடுவீர்கள்.

    நன்றி திவ்யாஹரி, தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    நன்றி சுசி, நினைவில் வைத்துக் கொண்டு காய்கள் கிடைக்கும் போது சாப்பிடுங்கள். கிடைக்கும் காய்கள் பட்டியல் கொடுத்தால் அதை வைத்துப் பதிவு போடலாம்.

    நன்றி ஸாதிகா, அப்ப நீங்க என் மற்ற சமையல் குறிப்புகளைப் படிக்கவில்லையா? வித்தியாசமான சமையல் குறிப்புகள்தான் என் பதிவில் இடம் பெற்றிருக்கும். கடலை மசால்,தயிர் மிக்சர், வெள்ளரி மசால், காரப்பொரி என அனைத்தும் படித்து செய்து பாருங்கள்.

    நன்றி சுவையான சுவை, இது இப்ப செய்து பார்த்ததில்லை. நான் ஒன்பதாது படிக்கும் போதே, மாலை விளையாடி விட்டு வந்தவுடன், நானும் என் நேர் மூத்த அண்ணாவும் செய்து சாப்பிடும் தாளித்த சாதம் இது. வத்தல் வகைகள் ஒன்று ஒன்றாக சேர்த்துப் பார்த்தோம். அருமையாக வந்து விட்டது.

    வணக்கம், வருக முருகானந்தம் அவர்களே, தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

    ReplyDelete
  9. நன்றி ஜலில்லா, வருடக் கணக்குகள் முடிவு செய்வதால் என்னால் பலரின் பிளாக்குகளுக்கு இந்த
    மாதம் முழுதும் போக முடியவில்லை. மன்னிக்கவும். பின்னால் ஒட்டு மொத்தமாக படித்து விடுகின்றேன்.

    ReplyDelete
  10. Adada
    sapadu vishayathula ungala muntha aalu illa pola,nala than yosikireenga.mela sonna mathiri mudinja photo podunga.

    ReplyDelete
  11. சுவையான சுவை,சுசி, சின்ன அம்மினி,மற்றும் குளிர் பிரதோசங்களில் உள்ள பதிவர்கள் எல்லாருக்கும், உங்க ஊரு எல்லாம் இப்ப ரொம்ப குளிருதா, கவலைப்படாதீர்கள். எனது பதிவில் உள்ள பூண்டுக் குழம்பு மிளகு இரசம் பதிவைப் படித்துச் செய்து சூடாக சாப்பிடுங்கள்.ஜலதோசம்,குளிர் வராது தடுக்கும் மிளகு இரசம். ஒரு டம்ளர் தெளிர்ந்த இரசம் குடித்துப் பாருங்கள். நன்றி.

    வாம்மா விஜீயீயீயீயீ. மறைமுகமா சாப்பாட்டு இராமன் சொல்லறீங்களா? சொன்னாலும் சொல்லாட்டியும் அப்படித்தான். எங்க மண்ணி நான் மெனு கொடுக்கும் போது எல்லாம் அப்படித்தான் சொல்வார்கள். நல்லா வக்கனையா கேக்குதா, பாரக்கலாம் நாளைக்கு வர்றவ எப்படி பண்றான்னு. நான் பதில் சொல்வேன். அவ எப்படி பண்ணுவா? நான் தான் அதுக்கு முன்னாடி சமைத்து விடுவேனோ என்று. இது எங்கள் குடும்பத்தில் நடக்கும் கலாட்டாவில் ஒன்று.
    நன்றி விஜி.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.